Showing posts with label வலைப்பூ: புதிய ஊடகம்: கட்டுரை. Show all posts
Showing posts with label வலைப்பூ: புதிய ஊடகம்: கட்டுரை. Show all posts

Tuesday, November 23, 2010

வலைப்பூ (Blog)


20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில் புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இணையத்தளங்களில் சமூக வலைத்தளங்கள், செய்தித்தளங்கள், வர்த்தகத் தளங்கள் என்று பலதரப்பட்ட வடிவங்களில் அவை வியாபித்து நிற்கின்றன.

செய்தி, தகவல், கருத்து, அனுபவம் என்று அனைத்து வகைப் பகிர்தல் முறைகளையும், அதற்கு கிடைக்கின்ற எதிர்வினைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக எளிய வடிவத்தில் கொண்டு வந்தது வலைப்பூ
(Blog). சுமார் பதின்மூன்று வருடங்களுக்குள்ளேயே, உலகளாவிய ரீதியில் வேகமாகவும், அதிக தாக்கத்துடனும் வளர்ந்து நிற்கிறது வலைப்பூ. கலை, கலாசாரம், அரசியல் என்று பலதரப்பட்ட தளங்களிலும் தகவல் பரிமாற்றியாகவும், கருத்துப்பகிர்தலுக்கான களமாகவும் வலைப்பூ வளர்ந்துள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்னர் வரை சமூக பொது விடயங்கள் தொடர்பில் கருத்துக் கூற வேண்டுமாயின் பிரதான ஊடகங்களை (அச்சு மற்றும் ஒளி- ஒலி) தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. சாதாரண ஒருவருக்கு அவற்றில் கருத்துக்களை வெளியிடுவது அல்லது மக்கள் முன் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக காரியமாகும். ஆனால், வலைப்பூக்களின் வருகை அதனை முற்றுமுழுதாக மாற்றி ஒவ்வொருவரும் குறித்த ஒரு விடயம் தொடர்பில் தனிப்பட்ட கருத்தினைத் தெரிவித்து மற்றவர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வடிவத்தை கொண்டு வந்தது.

ஒவ்வொருவரும் தனக்கென்று வலைப்பூக்களைப் பேண முடியும். அதிலும், புதிய பதிவுகளை முதலில் இருக்குமாறும், கட்டுரைகள், கவிதைகள், அனுபவங்கள் என்று பல முறையில் வகைப்படுத்தல்களை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அதுபோல, உங்களின் கற்பனை மற்றும் வடிவமைப்புத் திறனுக்கேற்ற வகையில் தளங்களின் (வலைப்பூ) வடிவங்களை அமைக்க முடியும். இவ்வாறு வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் அதிக சுதந்திரங்களை வலைப்பூக்கள் வழங்குகின்றன. இந்த மூலாதாரமே வலைப்பூக்களை உலகம் பூராகவும் துரிதமாக பிரபலப்படுத்தியது.

வலைப்பூவின் தோற்ற வடிவத்தின் ஆங்கிலப்பெயர் ப்ளொக்
(Blog) என்பதாகும். ஆனாலும், ப்ளொக் என்ற சொல் வெப்ளொக் (Webblog) என்ற பதத்திலிருந்தே தோற்றம் பெற்றது. 1997 டிசம்பர் 17ஆம் திகதி ஜோர்ன் பெர்கெர் (John Barger) என்பவரே வலைப்பூவிற்கு ஆங்கிலத்தில் Webblog என்ற பெயரை சூட்டினார். அதனை, 1999 எப்ரல் மாதம் முதல் பீற்றர் மெர்ஹொல்ஸ் (Peter Merholz) முதன்முறையாக ப்ளொக் (Blog) என்று பயன்படுத்தத் தொடங்கினார். அதுவே, பின்னர் நிலைத்துவிட்டது.

அதுபோலவே,
Blog எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் பெயர் ஒன்றைப் பெற விரும்பிய தமிழ் இணைய ஆர்வலர்களும், பாவனையாளர்களும் நீண்ட விவாதங்கள், கருத்து பரிமாற்றங்களுக்குப் பின்னர் ‘வலைப்பூ’ என்று பெயர் சூட்டினர். இதன்பின்னர் இன்றுவரையும் வலைப்பூ என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.

வலைப்பூ சேவையை ஸான்யா
(Xanya) நிறுவனம் முதன்முதலாக 1996ஆம் ஆண்டில் வழங்கத் தொடங்கியது. 1997 காலப்பகுதியில் மேலும் சில நிறுவனங்கள் வலைப்பூவிற்கான இலவச இடவசதியை வழங்கின. இந்த நிறுவனங்களில் ஒன்று பிளாக்கர்ஸ்.கொம் (bloggers.com) எனும் பெயரில் வலைப்பூ அமைப்பதற்கான சேவையை இலவசமாக அளித்தது. பிளாக்கர்ஸ்.கொம் இணையப் பாவனையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதையடுத்து, கூகுள் (Google) நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் வலைப்பூ அமைப்பதற்கான சேவை கூகுள் பிளாக்கர்ஸ்.கொமினூடு வழங்கியது. இதன் பின்னரான காலப்பகுதியில் மற்றுமொரு இலவச வலைப்பூ வழங்குனராக வேர்ட்பிரஸ்.கொம் (wordpress) உருவெடுத்தது.

தற்போதைய நிலவரப்படி உலகம் பூராகவும் 133 மில்லியன் (13.3 கோடி) வலைப்பதிவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 48 வீதமானவர்கள் அமெரிக்காவிலிருந்து வலைப்பதிவுகளை மேற்கொள்கின்றனர். அடுத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து 26 வீதமானவர்களும், ஆசியாவிலிருந்து 10 வீதமானவர்களும், மற்றைய நாடுகளிலிருந்து 16 வீதமானவர்களும் வலைப்பதிகின்றனர். அதுபோல், வலைப்பதிவுகளை மேற்கொள்பவர்களில் மூன்றில் இரண்டு (2/3) வீதத்தினர் ஆண்கள். அத்துடன், உலகம் பூராகவுமுள்ள ஊடகவியலாளர்களில் 35 வீதத்தினர் தங்களுக்கென்று தனியான வலைப்பதிவுகளைப் பேணுகின்றனர்.

வலைப்பதிவுகளில் தனிப்பட்ட அனுபவங்களை எழுதுபவர்களே அதிகம். அடுத்த நிலையில், தொழிநுட்ப தகவல்களை பகிர்பவர்களும், செய்திகளைப் பகிர்பவர்களும் இருக்கின்றனர். இதற்கு அடுத்தடுத்த நிலையில், வர்த்தகம், இசை, சினிமா, விஞ்ஞானம், மதம், சூழலியல், விளையாட்டு, சுகாதாரம், போக்குவரத்து என்ற நிலையில் விடயங்கள் பகிரப்படுகின்றன.

அதுபோல, வலைப்பதிவுகளை மேற்கொள்பவர்களில் 20 வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பதிவுகளை இடுகின்றனர். 23 வீதமானவர்கள் வாரம் ஒருமுறையும், 27 வீதமானவர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறையும் பதிவுகளை மேற்கொள்கின்றனர்.

வலைப்பூக்களின் வருகை இணையப் பாவனையாளர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் செலுத்தும் தாக்கள் அதிகமானது. தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டு மற்றவர்களுடன் விவாதிக்க முடிவதால் ஆர்வத்துடன் வலைப்பதிவுகளை செய்கின்றனர். இதற்காக இணையப்பாவனையாளர்களில் அனேகர் குறிப்பிட்டளவு நேரத்தையும் நாளாந்தம் செலவிடுகின்றனர்.

சுருக்கமாகவும், துரிதமாகவும் எண்ணங்களை வெளியிட்டு எதிர்வினைகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளவதை பலரும் விரும்புகின்றனர். நின்று நிதானித்து அதிக சொற்களை உள்ளடக்கிய கட்டுரைகளையோ, தொகுப்புக்களையோ வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகின்ற நிறையில் வலைப்பூக்களின் வருகை மாற்றீடாக அமைகின்றது. அத்துடன், புதிய வடிவத்திலான எழுத்தியலை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே, யார் வேண்டுமானாலும் வலைப்பதிவுகளை மேற்கொள்பவராக இருக்க முடியும் என்பது சில தருணங்களில் முறையற்ற தகவல் பரிமாற்றத்துக்கும் வித்திட்டு விடுகின்றது. ஓவ்வொரு வலைப்பதிவாளரையும் கட்டுப்பாடுகளற்ற ஊடகவியலாளராகக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஊடகவியலாளரும் தங்களுடைய ஆசிரிய பீட மற்றும் ஊடகவியல் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டியிருக்கின்றது. ஆனால், வலைப்பதிவாளர்களுக்கு அந்த வரைமுறைகள் இல்லாது இருப்பதால்; முறையற்ற செயற்பாடுகளும் இடம்பெற்று விடுகின்றன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஊடகவியலாளர்களில் பலர் வலைப்பதிவுகளில் எழுதியே வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்த நிலைமை ஆசிய நாடுகளிலும் தற்பொழுது சிறிது சிறிதாக அதிகரித்து வருகின்றது. வலைப்பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் மற்றவர்களுடன் கருத்துக்களை பகிர்வதுடன் மட்டுமின்றி வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும் என்ற நிலை அதிகரித்துள்ளதால் புதிதாக வலையுலகத்துக்குள் வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

(யாழ்தேவி குழுவினரின் ‘புதிய ஊடகம்’ என்ற ஆய்வின் பகுதியாகவே இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டது. விக்கிபீடியா மற்றும் இன்ரக் தளங்களிலிருந்தும் தகவல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.)